Published On: Sunday, March 18, 2012
நூதனசாலை விசாரணை குற்றப் புலனாய்வுத் துறையிடம்!
கொழும்பு தேசிய நூதன சாலையில் இருந்து களவாடப்பட்ட அரும் பொருட்கள் தொடர்பான விசாரணைகளை குற்றத் தடுப்பு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த தகவலை காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இதுவரை சம்பவம் தொடர்பில் 20 பேரிடம் வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இத்திருட்டுச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கென குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதனிடையே நுதனசாலை பாதுகாப்பு கமராக்களில் பதிவான அடையாளங்கள் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இது தவிர நிபுணர்களின் ஒத்துழைப்புடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துச் செல்லப்படுவதாகவும் காவல்துறை ஊடகத்துறை பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.
இதேவேளை திருடப்பட்ட விலைமதிப்பற்ற தொல் பொருட்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவதை தடுக்கும் வகையில் சுங்கத் திணைக்களத்திற்கு அது பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. கொழும்பு தேசிய அருங்காட்சியகத் திற்குள் நுழைந்த அங்கிருந்த விலைமதிப்பற்ற பண்டையகால பொருட்கள் பலவற்றை திருடிச் சென்றுள்ளமை நேற்று தெரியவந்துள்ளது.
இதனிடையே தேசிய அருங்காட்சியகத்திற்கு போதுமானளவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென தேசிய மரபுரிமைகள் அமைச்சர் கலாநிதி ஜகத் பாலசூரிய தெரிவிக்கின்றார். அருங்காட்சியகத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்கு தேவையான வளங்கள் தற்போது காணப்படவில்லை எனவும் அமைச்சர் குறிப் பிட்டுள்ளார்.
தேசிய அருங்காட்சியகத்தில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றபோது அங்கு மூன்று தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மாத்திரமே இருந்துள்ளமை தெரிய வந்துள்ளதென தேசிய மரபுரிமைகள் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

