Published On: Tuesday, November 19, 2013
காணாமல் போன ஆசிரியர் எங்கே? வவுனியாவில் போராட்டம்
தேர்தலில் வாக்களிப்பதற்காக வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்குச் சென்றபோது காணாமல் போயுள்ள வவுனியா அல்ஹாமியா பாடசாலையைச் சேர்ந்த கார்த்திகேசு நிரூபன் என்ற ஆசிரியரைக் கண்டு பிடித்துத் தருமாறு ஆசிரியர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை செவ்வாய்க்கிழமை வவுனியாவில் நடத்தியுள்ளனர்.
வவுனியா தெற்குக் கல்வி வலயப் பணிமனைக்கு எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. தமிழ்த்தேசய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் நிரூபனைக் கடத்தியவர்கள் அவரை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் ஆசிரியர்களைக் கடத்துவதை நிறுத்துமாறும், அவர்களைக் கைது செய்ய வேண்டாம், என்றும் கோரினர்.
இந்த ஆசிரியர் காணாமல் போய் இரண்டு மாதங்களாகிவிட்ட போதிலும், மனித உரிமை ஆணைக்குழுவினரும், பொலிசாரும் இன்னும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கண்டனம் தெரிவித்துள்ளனர்.


