Published On: Saturday, November 16, 2013
இலங்கை விசாரிக்காவிட்டால் ஐநா மன்ற விசாரணை கோருவோம்--கேமரன்
இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்கால மனித உரிமை மீறல்கள் குறித்து, இலங்கை மார்ச் மாதத்துக்குள் சுயாதீனமான ஒரு விசாரணையை அமைக்காவிட்டால், பிரிட்டன், இது தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணையை நடத்துமாறு ஐநா மன்றத்திடம் கோரும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் எச்சரித்திருக்கிறார்.
காமன்வெல்த் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள கொழும்பு சென்றிருக்கும் டேவிட் கேமரன், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேசுகையில் இந்த எச்சரிக்கையை விடுத்ததாகத் தெரிவித்தார். அவர் தனது கருத்துக்களை நேரடியாகவும், உறுதியாகவும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் தெரிவித்ததாக இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உண்மையை கூறுவதே நல்லிணக்கத்துக்கு அவசியமானது. அரசியல் உரிமைகளை பாதுகாக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். போர் முடிவடைந்துள்ளபடியால் இலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். நாட்டை ஒன்றுபடுத்த இலங்கை அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேமரூன் வலியுறுத்தியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்னதாக நேற்று அவர் யாழ்ப்பாணம் சென்று தமிழ் சமூகத்தினரை சந்தித்தார்.
இன்று அவர் செய்தியாளர்களிடையே பேசுகையில், பெருந்தன்மையாக நடந்துகொள்வதன் மூலமாகத்தான் நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்க முடியும் என்று குறிப்பிட்டார் கேமரன்.
மஹிந்தவுடனான தனது சந்திப்புல் கடுமையான கருத்துக்கள் பரிமாறபட்டதாகவும் ஆயினும், இந்த சந்திப்பு தேவையானது, பெறுமடியானதுதான் என்றும் அவர் கூறினார்.
" நான் சொன்னது அனைத்தையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் அவர்கள் இந்தப் பிரச்சினைகளில் முன்னேற்றம் காண விரும்புகிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால், இந்த விஷயத்தில் சர்வதேச அழுத்தம் இருப்பது உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்" என்றார் கேமரன்


